சத்துணவு திட்டத்தில் புதிய மெனுக்களை அறிமுகம் செய்யவும், உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல், முதல்வர் விஜய் பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனையின் போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
அப்போது அவர் சத்துணவுத் திட்டத்தில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன என்பதை கேட்டறிந்தார். அதற்கு அதிகாரிகள் மதிய உணவிற்கு வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், கருப்பு கொண்டை கடலை குழம்பு, தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக சொல்லப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள். அது போல் முதல்வராக இருந்த ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட காலை உணவு திட்டத்தின் கீழ் உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வீட்டு உணவு போல் சுத்தமாக சமைத்து தர வேண்டும். கூடவே ஊட்டச்சத்தும் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளாராம்.
அது போல் உணவு பட்டியலில் மாற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளாராம். எப்போதும் ஒரே உணவை வழங்காமல் தற்போது வழங்குவதற்கு பதில் வேறு உணவுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். அதிகாரிகள் இது குறித்து உணவு பட்டியலை தயாரித்து அதை முதல்வரிடம் சமர்ப்பித்து அவரது ஒப்புதலுடன் புதிய உணவு பட்டியல் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தமிழக பள்ளிகளில் பல ஆண்டுகளாக சத்துணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை நீக்கவும் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த காமராஜரால் மதிய உணவு திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. பிறகு மதிய உணவு என இல்லாமல் 1982 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் சத்துணவு திட்டம் என தொடங்கப்பட்டது.