நாட்டுக்கே வழிகாட்டிய ஏழைப்பங்காளர்.. கர்ம வீரர் காமராஜரின்.. 10 முத்தாய்ப்பான திட்டங்கள்
கர்ம வீரர், ஏழைப்பங்காளர், கருப்பு காந்தி உள்ளிட்ட சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட காமராஜரின் பிறந்த தினம் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. விருதுநகர் என தற்போது அழைக்கப்படும் விருதுப்பட்டியில் 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி காமராஜர் பிறந்தார். தொடக்க கல்வி மட்டுமே படித்த காமராஜர், குடும்பத்தில் வசதியின்மையால் துணிக்கடையில் வேலைக்கு சென்றார்.
16-ஆவது வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் காமராஜர். விடுதலை போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்ட காமராஜர் பல்வேறு முறை ஆங்கிலயே அரசின் அடக்குமுறைக்கு உள்ளாக்கபட்டார். 1954 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக காமராஜர் பதவியேற்றார். 9 ஆண்டுகள் அதாவது 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த காமராஜர் செய்த திட்டங்கள் ஏராளம்.
காலத்திற்கும் மறக்க முடியாத பல முன்னோடி திட்டங்களை காமராஜர் செய்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். காமராஜரின் பிறந்த நாளான இன்று அவரது சிறப்பை போற்றும் விதமாக ஆட்சி காலத்தில் அவர் செய்த திட்டங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1. பள்ளிக்கூடங்கள்:
காமராஜர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ராஜாஜி கொண்டு வந்திருந்த கல்வி திட்டத்தை மாற்றி அமைத்து 11 வயது வரை குழந்தைகளுக்கு இலவச கல்வி கொண்டு வந்தார். மாணவர்கள் கல்விக்காக தொலை தூரம் அலையக் கூடாது என்பதற்காக, மாணவர்களின் வசிக்கும் அருகாமை இடங்களிலேயே பள்ளிகளை திறந்தார்.
ஒவ்வொரு 3 கி.மீட்டர் சுற்றளவிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற கல்விக்கொள்கையை உருவாக்கினார். காமராஜரின் ஆட்சி காலத்தில் சுமார் 12 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் மூலம் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்லும் விகிதம் அதிகரித்தது. கல்விக்கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதார பாராட்டப்பட்டார்.
2. மதிய உணவு திட்டம்:
காமராஜர் கொண்டு வந்த மற்றொரு முத்தாய்ப்பான திட்டம் மதிய உணவு திட்டம் ஆகும். வேலைக்கு போறோம்.. பள்ளி கூடத்திற்கு போனால், எங்க புள்ளைங்க எப்படி சாப்பிடும் என்று மக்கள் மனம் வாடிய நிலையில், பள்ளிகளிலேயே மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். மதிய உணவு திட்டத்தால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. 1956 ஆம் ஆண்டு காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பின்னாளில் இது நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட்டது.
3. நீர் திட்டங்கள்:
விவசாயிகள் நலனிலும் காமராஜர் மிகுந்த அக்கறை காட்டினார். விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்காகவும் பல திட்டங்களை கொண்டு வந்தார். தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்க கூடிய மணிமுத்தாறு அணை, வைகை அணை, அமராவதி, சாத்தனுர் உள்ளிட்ட திட்டங்களை காமராஜர் நிறைவேற்றினார். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் முன்பாக அதாவது 1955 ஆம் ஆண்டு காமராஜரால் கேரளா மலம்புழாவில் அணை கட்டினார். இந்த அணை பாலக்காடு பகுதிக்கு பெரும் பங்காற்றுகிறது.
4. தொழில்துறை:
காமராஜர் தொழில் துறையிலும் பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கை இந்த தொழில் நிறுவனங்கள் ஆற்றின. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பெல் நிறுவனம், கல்பக்கத்தில் உள்ள அணுமின் நிலையம், சேலம் இரும்பு தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் காமராஜர். மத்திய அரசின் இந்த நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு வேலைவாய்ப்பும் வளர்ச்சியும் கிடைத்தன.
5. தொழிற்பேட்டைகள்:
தமிழகத்திற்கு வேலை வாய்ப்புகளை பெருக்கும் விதமாக கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டைகள் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
6. உயர் கல்வி நிறுவனங்கள்:
சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக உள்ள சென்னை ஐஐடி கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் காமராஜர்தான். காமராஜர் முதல்வராக இருந்த போது, 1959ஆம் ஆண்டு மத்திய அரசுடன் இணைந்து ஐஐடி அமைய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். சென்னை ஐஐடியில் நிர்வாகக் கட்டிடத்தில் காமராஜரின் புகழை போற்றும் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.
7. இலவச பள்ளிச் சீருடை திட்டம்:
பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் இடையே பாகுபாடு தெரியக்கூடாது. அனைத்து மாணவர்களும் சமம்.. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு தெரியக் கூடாது என்பதற்காக பள்ளிகளில் சீருடை திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். இலவசமாக பள்ளிகளிலேயே சீருடைகள் வழங்கப்பட்டன. காமராஜர் போட்ட விதை இன்றளவும் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
8. கிராமங்களுக்கும் மின்சாரம்:
காமராஜர் ஆட்சியில் கிராமங்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். நகர்புறங்களில் இருப்பதை போல கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினார்.
9. சுகாதாரத்துறையில் அக்கறை:
காமராஜர் தனது ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறையிலும் அக்கறை செலுத்தினார். போலியோ பாதிப்பு, அம்மை நோய் போன்ற கொடூர நோய்களை கட்டுப்படுத்தி சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டங்களை காமராஜர் அறிவித்தார். அரசின் வருவாய் அந்நாட்களில் குறைவாக இருந்தாலும் இதனை தீவிரமாக செயல்படுத்த முயற்சி மேற்கொண்டார்.
10. முதியோர் உதவித்தொகை:
தமிழகத்தில் முதல் முறையாக முதியோர் உதவித்தொகை திட்டத்தை அறிமுகம் செய்தவரும் காமராஜர்தான். காமராஜர் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அப்போது மூதாட்டி ஒருவர், தள்ளாத வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.. எங்களுக்கு ஏதேனும் உதவி செய்யக்கூடாதா' என்று கேட்டார்.. ஆகட்டும் பார்க்கலாம் என்ற காமராஜர், அதிகாரிகளிடம் உடனடியாக இதுபற்றி ஆலோசித்தார். அதிகாரிகள் மாதம் 20 ரூபாய் கொடுக்கலாம் என்று ஆலோசனை கூறவே உடனடியாக அதற்கான உத்தரவையும் பிறப்பித்தார். 1962 ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.