தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த மாணவி, இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவி அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் பலத்த காயங்களுடன் கொல்லப்பட்டு சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் இந்த கொடூர குற்றத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என கூறிய நீதிபதி, தர்ம முனீஸ்வரன் மீதான இரண்டு பிரிவுகளிலும் அவருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்குவதாக அறிவித்தார். இந்த வழக்கில் 76 நாட்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது