TAMIL NADU NEWS

அரசு அலுவலகங்களில் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு..

By ASWATHTHAMAN N • 2026-07-16 13:29 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
அரசு அலுவலகங்களில் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு..

ஜூலை 16: சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் நிரந்தர பணியாளர்கள் மட்டுமின்றி தற்காலிக ஊழியர்களும் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். ஆண்டுதோறும் பணவீக்கம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.
ஊதிய விகிதங்கள் அதிகரிப்பு
அந்த வகையில், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான தினக்கூலி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- சென்னை மாவட்ட நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தினக்கூலி விகிதங்கள் 31.03.2027 வரை அமலில் இருக்கும். புதிய ஊதிய விகிதத்தின் படி சாதாரண தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு கூலியாக ரூ.767 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 461 ஆக இருந்தது.
எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?
* எலக்ட்ரிஷீயன் மற்றும் பிளம்பருக்கு அதிகபட்சமாக ஒருநாள் சம்பளம் ரூ.1,137 என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ.870 ஆக இருந்த நிலையில், 267 உயர்த்தப்பட்டுள்ளது.
* பாதுகாவலர் பணிக்கு ரூ.802
* இளநிலை உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளருக்கு ரூ.949
* தையல் தொழிலாளி: ரூ.844
* தட்டச்சர்: ரூ. 969
* கம்ப்யூட்டர் ஆபரேட்டர்: 1,001,
என மொத்தம் 87 வகையான பணியிடங்களுக்கும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள தொகைகள் குறைந்தபட்ச தினக்கூலி மட்டுமே எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பணியின் தன்மை மற்றும் அனுபவம், பணி நேரத்தை பொறுத்து சம்பளம் அதிகரித்தும் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்
குறைந்தபட்ச சம்பளம் சட்டம் 1948 கீழ் ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தொகையை மாற்ற வேண்டுமெனில் அரசு துறைகள் மற்றும் அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு விதிகளின் படி முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவானது அரசு அலுவலகங்களில் தினக்கூலியில் பணி செய்பவர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், அரசு திட்டங்களில் தற்காலிகமாக பணி செய்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

ASWATHTHAMAN N 0 followers