ECONOMY

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்! "இந்திய அளவில் ஏற்றுமதியில் 2-வது இடம்"

By ASWATHTHAMAN N • 2026-09-03 06:17 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!  "இந்திய அளவில் ஏற்றுமதியில் 2-வது இடம்"

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், அதிக சரக்கு ஏற்றுமதி செய்த மாவட்டங்களின் பட்டியலில், தேசிய அளவில் காஞ்சிபுரம் இராண்டாவது இடம் பிடித்துள்ளது. மின்னணு பொருட்கள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவின் 2-வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டு வர்த்தக துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் (ADGFT), இந்திய அளவில் வர்த்தக பொருட்கள் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் 2-வது இடத்தைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார். இந்திய வர்த்தக ஏற்றுமதி துறையில் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டம் 8.29 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் 5.98 சதவீத வர்த்தக பொருட்கள் ஏற்றுமதி பங்களிப்பை வழங்கி தேசிய அளவில் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) ஏற்றுமதியை பெருமளவில் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ‘ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்’ (Export Promotion Mission - EPM) எனும் விரிவான கட்டமைப்பை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குறு மற்றும் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு நிதிசார் உதவிகளை வழங்கும் ‘நிர்யாத் புரோத்சாகன்’ திட்டமும், நிதிசாரா உதவிகளை வழங்கும் ‘நிர்யாத் திஷா’ திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதில் நிர்யாத் புரோத்சாகன் திட்டம் மூலம் ஏற்றுமதியாளர்களுக்குக் குறைந்த வட்டியில் வர்த்தக நிதி, ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கடன்களுக்கான வட்டி மானியம், பிணைய ஆதரவு மற்றும் அதிக ஆபத்துள்ள புதிய சந்தைகளுக்கான கடன் மேம்பாடு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதேபோல நிர்யாத் திஷா திட்டம் மூலமாக ஏற்றுமதி பொருட்களின் தரம் மற்றும் இணக்கத்திற்கான வழிகாட்டுதல்கள், சந்தை மற்றும் தளவாட வசதிகள் அளிக்கப்பட்டு நாட்டின் ஏற்றுமதி சூழல் வலுப்படுத்தப்படுகிறது.

அஞ்சல் துறை வசதிகள் மற்றும் தொடர்பு விவரங்கள்
இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அஞ்சல் துறை அலுவலர், சிறு ஏற்றுமதியாளர்கள் தங்களது பொருட்களை மிக எளிதாக ஏற்றுமதி செய்ய அருகிலுள்ள தபால் நிலையங்கள் மூலமாக வழங்கப்படும் பிரத்யேக வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விளக்கினார். இத்தகைய ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி உதவிகள் குறித்த கூடுதல் விவரங்களை www.dgft.gov.in, www.trade.gov.in மற்றும் www.indiantradeportal.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொழில்முனைவோர்கள் இதுகுறித்த ஆலோசனைகளுக்குப் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காஞ்சிபுரம் அலுவலகத்தை 044-27238837 மற்றும் 044-27238551 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.

ASWATHTHAMAN N 0 followers