விவசாயிகள் ஏரிகளில் இலவசமாக வண்டல் மண் அள்ள அரசு குட்நியூஸ் தெரிவித்துள்ளது..
தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ளும் நடைமுறையானது, கடந்த 2017ம் ஆண்டு முதல் (தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ல் திருத்தம் செய்யப்பட்டு) நடைமுறையில் உள்ளது.
நீர்நிலைகளில் ஆண்டாண்டு காலமாக படிந்துள்ள வண்டல் மண்ணை எடுப்பதன் மூலம், நீர்நிலைகளின் ஆழம் அதிகரித்து அவற்றின் நீர் சேமிப்புத் திறன் பெருமளவில் உயர்கிறது. அதனால்தான் இதனை அரசு ஊக்குவிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, பருவமழை காலங்களில் வெள்ள அபாயமும் கணிசமாகக் குறைகிறது.
விவசாயிகளுக்கு வண்டல் மண்
விவசாயிகளுக்கும் வண்டல் மண் ஒரு சிறந்த இயற்கை உரமாகும்.. இது மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்து, ரசாயன உரங்களின் தேவையைக் குறைத்து, பயிர் விளைச்சலை பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுபோலவே , மண்பாண்ட தொழிலாளர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் தரமான களிமண் கிடைப்பதால் அவர்களின் வாழ்வாதாரமும் உற்பத்தி திறனும் மேம்படுகிறது.
தூர்வாரும் பணிக்கான அரசு செலவினம் மிச்சமாவதுடன், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் இயற்கை வள மேலாண்மை ஒரே நேரத்தில் வலுப்பெறுவது இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சாதகமாகும்.
எனவேதான் மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதற்கான உத்தரவை தங்களது மாவட்ட விவசாயிகளுக்காக அடிக்கடி அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், இப்போது அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரும் உத்தரவு பிறப்பித்துள்ளதார்.. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
நீர்நிலைகள் நீர்த்தேக்கத் திறன்
"தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ், நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை அகற்றுவதன் மூலம் நீர்நிலைகளின் நீர்த்தேக்கத் திறனை அதிகரிப்பதுடன், அவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தகுதியான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நன்செய் நிலங்கள்:
அதன்படி, நன்செய் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புன்செய் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர், வீட்டு உபயோகத்திற்காக 30 கன மீட்டர், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 60 கன மீட்டர் என்ற அளவில் வண்டல் மண் அல்லது களிமண்ணை டிராக்டர் மூலம் மட்டுமே இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
விவசாய நிலங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது தேவைக்கேற்ப இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
வண்டல் மண் & களிமண்:
வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தின் விவரங்களையும், களிமண் தேவைப்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது தொழில் தொடர்பான விவரங்களையும் பதிவு செய்து, https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த அரசுத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.