June 24, 2026

வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை உணவுக்கு பதிலாக பிஸ்கெட் வழங்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன், “காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் மாணவர்களின் ஊட்டச்சத்திற்காக செயல்படுத்தப்படுகின்றன. பிஸ்கெட் என்பது மாற்று உணவாக கருதப்பட முடியாது. குறித்த நேரத்தில் உணவு வழங்க இயலாத சூழல் ஏற்பட்டிருந்தால், அதற்கு பதிலாக சமைத்த உணவு வழங்கப்பட்டிருக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்காரர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பள்ளியில் வகுப்பு நேரத்தில் மாணவர்களுடன் தொடர்புடைய நிகழ்வு குறித்து பேசுகையில், “பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு நலத்திட்ட உதவியும் மாணவர்களின் கல்வியை பாதிக்காத முறையில் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

பள்ளிகளில் மாணவர்களின் கல்விச் சூழலை பாதுகாப்பது முக்கியம் என்றும், வகுப்பு நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Written by

ASWATHTHAMAN N

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION