SOCIAL AWARENESS

அம்மா உணவகங்களுக்கு மீண்டும் மவுசு..

By ASWATHTHAMAN N • 2026-07-21 12:22 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
அம்மா உணவகங்களுக்கு மீண்டும் மவுசு..

அம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்க அரசு மானியத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கும் ஒரு சமூக நலத் திட்டமாகும். இத்திட்டம் 2013-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சென்னையில் தொடங்கப்பட்டது.

சென்னையில் செயல்பட்டு வரும் 383 அம்மா உணவகங்களில் தரம் மற்றும் சுவை மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தினசரி பயனாளிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்தில் இருந்து 1.04 லட்சமாக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகரில் அனைத்து வார்டுகளிலும், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 383 இடங்களில் தற்போது அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மற்றும் மாலை நேரத்தில் இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரியாக ஒரு நாளில் 67,164 பேர் அம்மா உணவகங்களில் சாப்பிட்டனர். தற்போது தினசரி சராசரியாக 1,04,102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருகின்றனர்.
அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 87,60,489/- வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது ரூ.1,35,78,548/-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் சுவை திருப்திகரமாக இல்லை என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யவும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ASWATHTHAMAN N 0 followers