தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் செயல்களை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் முன்னெச்சரிக்கை..
முதல்வர் விஜய் மற்றும் காவல்துறை DGP மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மாநிலம் தழுவிய தீவிர கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிறைய வழக்குகள் உள்ள குற்றவாளிகள், பலதரப்பப்ட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களைக் குறிவைத்து இந்தச் சிறப்பு வேட்டை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது.
7 நாட்களில் 31,000க்கும் மேற்பட்டோரிடம் சோதனை
கடந்த ஜூலை 15, 2026 முதல் ஜூலை 21, 2026 வரையிலான ஒரு வார காலத்தில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சிறப்புச் சோதனையின் போது, ஏற்கனவே எப்ஐஆர் லிஸ்ட் மற்றும் போலீஸ் கண்காணிப்பில் இடம் பெற்றுள்ள ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட 31,005 நபர்கள் நேரடியாக சோதனை செய்யப்பட்டனர்.
அவர்களில் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்ட 1,155 நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2,906 பிடியாணைகள்
இந்த ஆபரேஷனில் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த பிடியாணைகளை நிறைவேற்ற காவல்துறை தனி கவனம் செலுத்தியது. ஜூலை 15 முதல் ஜூலை 21 வரையிலான இந்தச் குறுகிய காலத்தில் மட்டும், ஜாமீனில் வர முடியாத 2,906 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், நீதிமன்றப் பிடியாணை நிலுவையில் உள்ள மற்ற தலைமறைவு குற்றவாளிகளையும் விரைவாகக் கைது செய்யத் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், ஜாமீன் அல்லது சொந்தப் பிணையில் வெளிவந்துவிட்டு, அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆஜராகத் தவறிய குற்றவாளிகள் மீது இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜாமீனை ரத்து செய்ய உத்தரவு
ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் குற்றவாளிகளின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காகத் தேவையான சட்டப்பூர்வ மேல்நடவடிக்கைகளை விரைந்து தொடங்குமாறு அனைத்து மாநகரக் காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் மூலம் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.